
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் துரித விசாரணையின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டர். கிளிநொச்சி 13ஆம் கட்டையைச் சேர்ந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
“அராலி கிழக்கில் வீடொன்றில் இன்று அதிகாலை 6 தங்கப் பவுண் தாலிக்கொடி திருட்டுப் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்தது. அந்த வீட்டில் வசிப்பவர்கள் அண்மையில் உள்ள உறவினர் வீடொன்றில் நேற்றிரவு தங்கியுள்ளனர்.
இன்று காலை வீடு திரும்பிய போது, வீட்டின் கூரை பிரித்துக் காணப்பட்டுள்ளது. வீட்டின் அறையில் வைக்கப்பட்டிருந்த தாலிக்கொடியும் திருட்டுப் போயிருந்தமை கண்டறியப்பட்டது.
அதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் அந்த வீட்டின் குடும்பப்பெண் முறைப்பாடு வழங்கினார். அவரது முறைப்பாட்டின் படி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வீட்டின் கூரைப்பகுதியில் திருட்டில் ஈடுபட்டவரின் சேட் துணி ஒரு துண்டு மற்றும் சில தடையங்கள் கிடைத்தன.
அவற்றின் அடிப்படையில் மோப்பநாயின் உதவியுடன் அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து திருடப்பட்ட நகையும் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபர் நாளை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என்றும் பொலிஸார் கூறினர்.
