
சிறுமி தனது 13 வயதிலிருந்து வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குழுவினரால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரியாது. தற்போது சிறுமிக்கு 15 வயது. அவர் தாயாரின் பராமரிப்பில் வளர்கிறார்.
சிறுமி 13 வயதாக இருந்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் வசிக்கும் இளம் பெண்ணொருவரின் வீட்டில் ஆணொருவருடன் உறவு கொள்ள வைக்கப்பட்டுள்ளார். இனிப்பு பண்டங்களுக்காகவே அவர் முதலில் இந்த உறவில் ஈடுபடுத்தப்பட்டார்.
இதை தொடர்ந்து, அந்த வீட்டிலிருந்த இரண்டு பெண்களால் சிறுமி தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்தப்பட்டுள்ளார். சிறுமி முதலில் உறவு கொண்ட வீடியோவை எடுத்து வைத்துள்ளதாக மிரட்டிய அந்த இளம்பெண், சிறுமி விபச்சாரத்தில் ஈடுபட மறுத்தால், அந்த வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி, சிறுமியை தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்தனர். எனினும், சிறுமிக்கு பணம் எதுவும் வழங்கப்படவில்லை.
சிறுமி பாடசாலை முடிந்து வீடு திரும்புவதை கண்டாலே வாடிக்கையாளர்கள் சிலர் வர ஆரம்பித்து, அந்த பெண்களிடமிருந்து அழைப்பு வர ஆரம்பித்து விடுவதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குழுவினர் சிறுமியை தொடர்ந்து வல்லுறவுக்கு உள்ளாக்கி வந்துள்ளனர்.
இந்த கொடுமையை தாங்க முடியாமல் சிறுமி தனது நெருங்கிய உறவினர் ஒருவரிடம் முறையிட்டதையடுத்து, விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
சிறுமி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் வழங்கிய வாக்குமூலத்தையடுத்து, அவர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
பின்னர் இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்த வட்டுக்கோட்டை பொலிசார், சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில், சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 பெண்களும் அடங்குவர். அவர்களில் சிறுமியை வீடியோ எடுத்ததாக மிரட்டிய இளம்பெண், ரிக்ரொக் வீடியோக்களை வெளியிடுபவர் என்று தெரிய வந்துள்ளது.
இதுதவிர, சிறுமியை தொடர்ந்து வல்லுறவுக்கு உள்ளாக்கி வந்த 45 வயதான ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கிய மேலும் சில சந்தேகநபர்களை பொலிசார் கைது செய்யவுள்ளனர்.